மகளிருக்கு ஷாக்: ரூ.2500 உரிமைத் தொகை வராதா? அமைச்சர் சொன்னது என்ன..?

ரூ.2500 மகளிர் உரிமைத் தொகை எப்போது தான் வரும் என்று மகளிர் கொந்தளித்துக் கொண்டிருக்கும் நிலையில், இப்போதைக்கு வருவது கஷ்டம் தான் என்று அமைச்சரின் பேச்சின் மூலம் தெரிவதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

Aug 06, 2026 - 18:30
0 288
மகளிருக்கு ஷாக்: ரூ.2500 உரிமைத் தொகை வராதா? அமைச்சர் சொன்னது என்ன..?

முதலமைச்சர் விஜய் தலைமையிலான த.வெ.க. அரசின் முதல் 2026-27 ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நேற்று (ஆகஸ்ட் 05) நிதியமைச்சர் மரிய வில்சன் தாக்கல் செய்தார்.

தமிழக வெற்றி கழகத்தின் தலைவர், தற்போதைய முதலமைச்சருமான விஜய் மாமல்லபுரத்தில் நடைபெற்ற மகளிர் தின விழாவில் மகளிருக்கான உரிமைத் தொகை கடந்த அரசு ரூ 1000 வழங்கப்பட்ட வந்த நிலையில் அதனை உயர்த்தி மாதந்தோறும் ரூ 2500 வழங்கப்படும் என்று பேசியிருந்தார். இந்த நிலையில் தற்போது அது குறித்தான எந்தவொரு தகவலும் தமிழ்நாட்டின் நிதிநிலை அறிக்கையில் இடம்பெறவில்லை என்பது தமிழ்நாட்டின் உள்ள அனைத்து குடும்ப தலைவிகள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.

இந்த உரிமைத் தொகை குறித்து மிகுந்த எதிர்ப்பார்புடன் இருந்த அனைத்து குடும்பத் தலைவிகள் மத்தியில் இது குறித்தான நிதிநிலை அறிக்கையில் இடம்பெறாதது மிகப் பெரிய ஏமாற்றத்தை அளித்துள்ளது.  உரிமைத் தொகையை போலவே ஒரு குடும்பத்திற்கு 6 கேஸ் சிலிண்டர்கள் வழங்கப்படும் என்று அறிவித்திருந்த நிலையிலும் இது குறித்தான எந்தவொரு தகவலும் இடம்பெறவில்லை.

இப்படி மகளிருக்கான அறிவிக்கப்பட்டிருந்த திட்டங்கள் குறித்தான எந்தவொரு தகவலும் தற்போது வெளியிடப்பட்ட நிதிநிலை அறிக்கையில் இடம்பெறாதது பெரும் எதிர்பார்ப்பு மத்தியில் இது ஏமாற்றத்தை அளித்துள்ளது. 

இந்த நிலையில், வேளாண் பட்ஜெட் இன்று(ஆகஸ்ட் 06) தாக்கல் செய்யப்பட்ட நிலையில், சென்னை தலைமை செயலகத்தில் அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். 

அப்போது பேசிய அவரிடம் தவெக அளித்த தேர்தல் வாக்குறுதிகளான 2,500 உரிமைத்தொகை திட்டம், வேலை வாய்ப்பு இல்லாத இளைஞர்களுக்கு 4 ஆயிரம் உதவித்தொகை உள்ளிட்டவை பற்றி அறிவிப்புகள் எதுவும் இல்லை என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். 

அதற்கு பதிலளித்த அவர், ”பெரும்பாலான திட்டங்கள் நிறைவேற்றி வருகிறோம். இன்னும் ஒரு சில திட்டங்களை நிதி ஆதாரத்தை சரி செய்த பிறகு முதலமைச்சர் கண்டிப்பாக அறிவிப்பார். இன்று இருக்கும் சூழலில், இவ்வளவு கடனுக்கு மத்தியில் எப்போது முடியுமோ அப்போது உடனே முதல்வர் செய்வார். ஏனெனில் இதையெல்லாம் பிரதானமாக முதல்வர் ஏற்று கொண்டு இருக்கிறார். எங்கள் தேர்தல் வாக்குறுதிகளில் கூறப்பட்டவை அந்தந்த கால கட்டத்தில் கண்டிப்பாக நிறைவேற்றப்படும்” என்று மகளிர் உரிமைத் தொகை குறித்து அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம் அளித்தார். 

அமைச்சரின் இந்த பேச்சின் அடிப்படையில், மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 ஆக உயர்த்தி வழங்கப்படுவது இந்த ஆண்டு நடக்காது என்றும், சொல்லப்போனால் அடுத்த தேர்தல் வரும்போதுதான் அதனை நிறைவேற்ற வாய்ப்புகள் உள்ளது என்றும் அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 2
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User