பக்தர் உயிரிழப்பு… கட்டுப்பாடுகளை விதித்த இடுக்கு பிள்ளையார் கோயில் நிர்வாகம்..!
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற இடுக்கு பிள்ளையார் கோயிலில் ஆந்திராவைச் சேர்ந்த பக்தர் மூச்சுத்திணறி உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து, கோயில் நிர்வாகம் புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது.
இடுக்கு பிள்ளையார் கோயில் சிறிய குகை போன்ற அமைப்பைக் கொண்டது. பக்தர்கள் பின்புறம் வழியாக உடலை வளைத்து உள்ளே சென்று, கைகளை ஊன்றியபடி நகர்ந்து முன்புறம் வழியாக வெளியேறுவது வழக்கமாக உள்ளது. இந்த வழிபாட்டு முறைக்காக பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து கோயிலுக்குள் சென்று வருகின்றனர்.
இந்நிலையில், ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தைச் சேர்ந்த 36 வயதான தாசரி மணிக்குமார், குடும்பத்தினருடன் கிரிவலம் வந்துள்ளார். நள்ளிரவு நேரத்தில் இடுக்கு பிள்ளையார் கோயிலுக்குள் சென்ற அவர், உடல் பருமன் காரணமாக குறுகிய பாதையில் இருந்து வெளியேற முடியாமல் சிரமப்பட்டதாக கூறப்படுகிறது. பின்னர் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயக்கமடைந்த அவரை பக்தர்கள் மற்றும் உறவினர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பினர். ஆனால், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதனிடையே, இதே கோயிலில் இடுக்குப் பகுதியில் சிக்கிக்கொண்ட பெண் ஒருவரும் போராடி மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், உடல் பருமன் உள்ளவர்கள் மற்றும் வயதானவர்கள் இடுக்கு வழியாக செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாக கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. பக்தர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக திருவண்ணாமலை கிராமிய போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0




Comments (0)