விஜயின் வெள்ளிக்கிழமை சம்பிரதாயம்… பளிச் பட்டு வேட்டி சட்டை சென்டிமென்ட் !

முதலமைச்சர் விஜய் ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் பட்டு வேட்டி, பட்டு சட்டையில் தலைமைச் செயலகத்திற்கு வருவது அரசியல் வட்டாரங்களிலும் சமூக வலைதளங்களிலும் பேசுபொருளாகியுள்ளது.

Jul 31, 2026 - 19:06
Updated: 17 days ago
0 546
விஜயின் வெள்ளிக்கிழமை சம்பிரதாயம்… பளிச் பட்டு வேட்டி சட்டை சென்டிமென்ட் !

முதல்வர் விஜய்யின் வெள்ளிக்கிழமை சென்டிமென்ட் பின்னணியில் இருப்பது, ஃபேஷனா? சென்டிமென்டா? ஜோதிடமா? ஆடி மாதம் அதிலும் வெள்ளிக்கிழமை என்றால், அம்மன் டாபிக் என்பதையும் தாண்டி "வெள்ளிக்கிழமை என்றாலே மினுமினு பட்டில் மின்னலாக முதலமைச்சர் விஜய் உலாவருவது  ஃபேஷனா? இல்லை ஜோதிட சென்டிமென்டா?" என்று முதலமைச்சரின் வெள்ளிக்கிழமை  சென்டிமென்ட் குறித்துதான்  அரசியல் வட்டாரங்களிலும் சமூக வலைதளங்களிலும் ஹாட் டாபிக்காக ஓடிக்கொண்டிருக்கிறது.

ஆட்சிப் பொறுப்பேற்றதிலிருந்து ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் தவறாமல் பளிச் என்று   பட்டு வேட்டி பட்டு சட்டையுடன்   ஆஜாராகி வருகிறார்,  முதலமைச்சர் விஜய். தமிழ்நாட்டின் தேர்தல் பிரசாரத்தின் போது வெள்ளைச் சட்டை மற்றும் சந்தன கலர் பேண்ட் லுக்கில் சுற்றி வந்த விஜய், முதலமைச்சராக பதவியேற்ற போது யாரும் எதிர்பாராத  வகையில் தனது நெற்றியில் அரகஜா திலகம்  இட்டுகொண்டு, கோட் சூட் லுக்கில் குயிக் சேஞ்சுடன் தோன்றினார்.

அதற்கு நேர்மாறாக தற்போது எல்லாம்  வெள்ளிக்கிழமைகளில் பட்டு வேட்டி சட்டையுடன் தலைமைச் செயலகத்திற்கு வந்து கொண்டிருப்பது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. அதோடு, அதற்கான காரணம் என்ன என்பது சமூகவலைதளங்களில் விவாதப் பொருளாகவும் மாறியிருக்கிறது. பொதுவாகவே முதலமைச்சர் பதவியில் இருப்பவர்களின் பேச்சு செயல்பாடுகள் திட்டங்கள் மட்டுமல்லாமல் அவர்களின் உடைத் தேர்வுகளும்  மக்களின் கவனத்தை ஈர்ப்பது வழக்கமான ஒன்று.

மே 10 ஆம் தேதி கருப்பு நிற கோட் சூட்டில் மாஸான லுக்கில் பொறுப்பேற்ற விஜய் அதன் பின்னர் மே 29 ஆம் தேதி பட்டு வேட்டி சட்டையுடன்  மேலாளர் ஜெகதீஷ் பழனிசாமியின் இல்ல விழாவில் பங்கேற்றுவிட்டு அப்படியே தலைமைச் செயலகம் சென்றார். அன்றுமுதல், வாரத்தில் ஒருநாள், அதுவும் குறிப்பாக வெள்ளிக்கிழமைகளில் பட்டுவேட்டி, சட்டையுடன் அவர் தலைமைச் செயலகத்துக்கு வருவதுதான் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

சென்னையில் கடந்த 17-ஆம் தேதி சமூக நீதி விடுதியில் ஆய்வு மேற்கொண்டபோதும் முதலமைச்சர் விஜய் பட்டு வேட்டி, சட்டையுடன் தோன்றினார். அதனைத் தொடர்ந்து இன்று மீண்டும் வெள்ளிக்கிழமை என்பதால்  பட்டு வேட்டி சட்டை லுக்கோடு வந்துள்ளார். அதே நேரத்தில், கரூர் பயணம் மற்றும் பெரம்பூர் எம்.எல்.ஏ. அலுவலக திறப்பு நிகழ்ச்சி உள்ளிட்ட சில நிகழ்வுகளில் அவர் வழக்கமான நீலம், கருப்பு நிற சட்டைகளிலும் தோன்றியிருந்தார்.

படிக்கும் உங்களைப் போலவே பலருக்கும் இதுகுறித்து தெளிவான தகவல் எதுவும் இல்லை. பெரும்பாலும், மாற்றத்திற்காக வெள்ளிக்கிழமைகளில் மட்டும் வேட்டி, சட்டை அணிந்து வருகிறார் என்ற பொதுவான கருத்தே நிலவுகிறது.

இதற்கிடையில், "வெள்ளிக்கிழமை... பட்டு வேட்டி... இதெல்லாம் சும்மா இல்லை!" என்ற பேச்சு சமூக வலைதளங்களில் வேகமெடுத்துள்ளது. ஜோதிடசாஸ்திரத்தின்படி, வெள்ளிக்கிழமை சுக்ர பகவானுக்கு உகந்த நாள். முதல்வர் விஜய்க்கு அவரது ஜாதகத்தின்படி தற்போது சுக்ரதசையே நடந்துவருகிறது. சுக்ரதசையில் அவர் மேலும் பல உயரங்களை எட்டுவதற்கு, ஜோதிட ஆலோசனையின்படியே இப்படிப் பட்டு வேட்டி, சட்டை அணிவதாக சொல்லப்படுகிறது.

இதில் பட்டாடை, அதிலும் வெண்பட்டாடை என்பது சுக்ரனுக்கு உகந்தது. அதோடு வாசனை நிறைந்த அரகஜா, வெள்ளியிலான அணிகலன்கள் அணிவது இவை எல்லாமே சுக்ரனின் ஆதிக்கத்தை மேம்படுத்தும்.  அந்தவகையில் தலைமை அலுவலகத்தை இடம் மாற்றியதும்கூட சுக்ரனின் ஆதிக்கத்தினை பலப்படுத்துவதற்காகவே.

இந்த விஷயத்தில் விஜய் நேரடியாகச் சொல்லாவிட்டாலும், ஜோதிட சாஸ்திரப்படியே இப்படி மாற்றங்களைச் செய்கிறார். அவற்றுள் ஒன்றுதான் இந்த பட்டுவேட்டி சட்டையும் என்று மெதுவாக முணுமுணுக்கிறார்கள், ஜோதிடம் அறிந்தவர்கள். அதேபோல், தனது ஆஸ்தான ஜோதிடர் ரத்தன் பண்டிட் ஆலோசனையின் பேரில்தான் அவர் வெள்ளிக்கிழமைகளில் தொடர்ந்து பட்டாடையில் தோன்றி வருகிறார் என்றும் அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.

எனினும் இந்தப் பளிச் "பட்டாடை சென்டிமென்ட்" ரகசியம் குறித்து அதிகாரபூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User