ஜெயலலிதா 9-ம் ஆண்டு நினைவு தினம் : எடப்பாடி, பன்னீர்செல்வம் தனிதனியே அஞ்சலி

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 9 ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி, அவரது நினைவிடத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர். ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் தனியே அஞ்சலி செலுத்தினார்.

Dec 05, 2025 - 11:55
0 306
ஜெயலலிதா 9-ம் ஆண்டு நினைவு தினம் : எடப்பாடி, பன்னீர்செல்வம் தனிதனியே அஞ்சலி
Jayalalithaa's 9th death anniversary

6 முறை தமிழக முதல்வராக பொறுப்புவகித்த ஜெயலலிதா 2016 ஆம் ஆண்டு டிசம்பர் 5 ஆம் தேதி உடல்நலக்குறைவால் காலமானார். அவரது நினைவு நாளை அதிமுகவினர் ஆண்டுதோறும் அனுசரித்து வருகின்றனர்.மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 9-ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது.

இதையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் வெள்ளிக்கிழமை காலை 10.45 மணியளவில் எதிர்க்கட்சி தலைவரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி கே.பழனிசாமி மலர் வளையம் மரியாதை செலுத்தினர்.

அதைத் தொடர்ந்து அதிமுகவின் மூத்த தலைவர்கள், முன்னாள் அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் இதில் பங்கேற்றனர். அதிமுகவினர் அனைவரும் கருப்பு சட்டை அணிந்து வந்து மரியாதை செலுத்தினர்.

இதன் பின்னர் எடப்பாடி தலைமையில் அதிமுகவினர் அனைவரும் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர். 

கவுதமி தனிஆவர்தனம்

அதிமுகவில் இணைந்த நடிகை கவுதமி காலை 9 மணிக்கே ஜெயலலிதா நினைவிடத்திற்கு வருகை தந்திருந்தார்.  எடப்பாடி வருவதற்கு 10 மணிக்கு மேல் ஆகும் என்பதால், அவரால் நீண்ட நேரம் நிற்க முடியவில்லை. இதனால் எடப்பாடி ஜெயலலிதா நினைவிடம் வரும் போது கவுதமி அங்கு இல்லை. எடப்பாடி கிளம்பி சென்ற பிறகு தனியாக வந்து ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திவிட்டு புறப்பட்டு சென்றார். 

ஓ.பன்னீர்செல்வம் அஞ்சலி

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 9-ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, ஓ.பன்னீர்செல்வம் அவரது ஆதரவாளர்களுடன் அஞ்சலி செலுத்தினார். மெரீனா கடற்கரையில் அமைந்துள்ள ஜெயலலிதா நினைவிடத்திற்கு தனது ஆதரவாளர்களுடன் வருகை தந்த பன்னீர்செல்வம், அங்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர். 

இதை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பன்னீர்செல்வம்: ஒருங்கிணைந்த அதிமுக என்பது தான் தொண்டர்களின் பலம். பிரிந்தவர்கள் ஒன்று சேர வேண்டும் என்பதற்காக தான் அமித்ஷாவை சந்தித்தேன். நான் எப்போதும், எந்த இடத்திலும் புதிய கட்சி ஆரம்பிக்க போவதாக சொல்லவில்லை. தவெகவில் இணைந்த பிறகு செங்கோட்டையன் உடன் நான் பேசவில்லை. இவ்வாறு அவர் கூறினார். 

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User